ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலம் – கடந்த சனிக்கிழமை (06.02.2010) ஐ.நா.வின் மனிதாபிமானச் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை பலஸ்தீன் மக்கள் மீதான பல்வேறு மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு எத்தகைய நியாயமான காரணங்களுமின்றி அவர்களின் வீடுகளைத் தகர்த்துவருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 16 பலஸ்தீன் பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளனர் என்றும், 2010 ஆம் வருட ஆரம்பமுதல் இத்தகைய தனிநபர் தாக்குதல்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை சட்டபூர்வமான கட்டட நிர்மாண அனுமதியற்ற எத்தனையோ சட்டவிரோதக் கட்டடங்களை விடுத்து, பலஸ்தீனர்களின் 20 வீடுகள், பிற கட்டடங்களை வேண்டுமென்றே இடித்துத் தகர்த்துள்ளது என்றும் அவற்றுள் மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் சேமிப்பகங்கள் என்பனவும் அடங்கும் என்றும் மேற்படி அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களான யூதக் குடியேற்றவாசிகள் பலஸ்தீன் பிரஜைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத்தின் ஷெய்க் ஜர்ராஹ் காலனியில் உள்ள வீட்டு உடைமையாளர்களான பலஸ்தீனர்களுடனான மோதல்கள் திட்டமிட்டு உருவாக்கப்படுவதோடு, பலஸ்தீனரின் வீடொன்று யூதக் குடியேற்றவாசிகளால் முற்றுகையிடப்பட்டிருப்பதாகவும் மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அல் ஹலீல் நகரின் அல் பகா எனும் கிராமத்திலும் ரமல்லாவின் அபொட் கிராமத்திலும் அத்துமீறி நுழைந்துள்ள யூதக்குடியேற்றவாசிகள் அங்குள்ள பலஸ்தீன் விளைநிலங்களை நிர்மூலமாக்கியுள்ளதோடு, ஒலிவ் மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையிலே, காஸாவிலுள்ள ஒரேயொரு மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை இயங்கச் செய்வதற்குத் தேவையான டீசல் விநியோகத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை கட்டுப்படுத்தியிருப்பதன் மூலம், முற்றுகைக்குட்பட்டுள்ள காஸா பிரதேசத்தில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பெரும் இடர்ப்பாடுகள் நிலவுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா. அமைப்பு வெளியிட்டுள்ள மேற்படி அறிக்கையின் படி, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது மேற்கொண்ட அத்துமீறல் யுத்தத்தினால் காஸாவெங்கிலும் உள்ள மின் விநியோக இணைப்புகள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் முற்றாகச் சேதமடைந்துள்ளதோடு, அவற்றைத் திருத்திப் புனரமைப்பதற்குத் தேவையான சாதனங்களை காஸாவுக்குள் கொண்டுவர இஸ்ரேல் இன்றுவரை தடைவிதித்துள்ளமையால் சுமார் 40,000 பலஸ்தீன் மக்கள் எத்தகைய மின்சார வசதியுமின்றி அல்லலுறுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
அல் ஹலீல் நகரில் அமைந்துள்ள அரபுக் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் உரைநிகழ்த்திய பலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி முஸ்தஃபா அல் பர்கோதி அவர்கள் இது தொடர்பாகக் கருத்துரைக்கையில், பலஸ்தீனும் அதன் மக்களும் மிகப்பெரும் ஸியோனிஸ சதிக்கு முகங்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை திட்டமிட்ட அடிப்படையில் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு மேற்குக் கரையில் தொடர்ந்தும் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை விஸ்தரித்து